Friday, April 22, 2011

வெட்டுபுலி - தமிழ்மகன்




வரலாறு எவ்வளவு முக்கியம் என்பது வயது ஏற ஏற தான் தெரிகிறது. நாம சிறுவர்களாக இருக்கும் போது எங்க காலத்துல இப்படி இருந்தோம்ன்னு சொல்லுற பெருசுகளை பார்த்து மொக்கையா ஒரு சிரிப்பு சிரிச்சு வச்சுட்டு போயிட்டே இருப்போம். இப்போ யாராவது கொஞ்ச நேரம் அந்த மாதிரி பேசுவாங்களா இந்த ஏரியா இதுக்கு முன்னாடி எப்படி இருந்துச்சுன்னு தெரிஞ்சிக்க தோணுது. 

என்னோட பாட்டி இருந்த வரைக்கும் கொஞ்சம் பழைய கதையை சொல்லிட்டு இருந்தாங்க. அவங்களுக்கு பிறகு யாரும் நாற்பது ஐம்பதுகளில் தமிழ்நாடு எப்படி இருந்தது என்று சொல்லவில்லை.அதை பற்றி தெரிந்துகொள்ளவும் விருப்பமில்லாமல் இருந்தது.  அப்பா ஸ்கூல் படிக்கிறதுக்காக தினமும் அஞ்சு கிலோமீட்டர் நடந்து போயிட்டு வருவாராம். ரோடு வசதி எதுவும் இல்லாததுனால பத்தாவது வரைக்கும் நடந்தே போயிட்டு வருவாராம். புதரு மண்டிக்கு நடுவுல நரி இருக்குமாம். இந்த புத்தகம் படிச்ச பிறகு பாட்டி இன்னும் கொஞ்ச நாள் உயிரோட இருந்து இருக்கலாம்னு தோணுது. இப்போ அப்பா பிறந்த இடம் ரொம்ப முன்னேறி இருக்கு.   இன்று நம் கண்முன் நடக்கும் ஒரு சம்பவம் என்பது நாளை நமது பேரன் பேத்திகளுக்கு வரலாறாக தெரிகிறது. சில சமயம் இந்த வரலாறு என்பது வாய் மொழியாக  அங்கே கேட்டேன் இங்கே கேட்டேன் என்று ஒன்று ஒன்பதாக திரித்து அதன் உண்மையான வடிவமே மழுங்கி போயிருக்கும். சம்பவங்களை வரலாறாக மாற்றிய பெருமை எல்லாம் ஊடகங்களுக்கே சேரும். இப்படி வரலாற்றை நாவல் வடிவமாக கொஞ்சம் புனைவையும் சேர்த்து கொண்டு நம்மை ஒரு காலச்சக்கரத்தில் ஏற்றி 1930 இருந்து 2000 ஆண்டு வரை முக்கிய நிகழ்வுகள் வாயிலாக இரு குடும்பத்தின் கதையை திராவிட கட்சியின் வரலாறை கொண்டு அட்டகாசமான நாவலை படைத்துள்ளார் ஆசிரியர் தமிழ்மகன்.



இந்நுலின் ஆசிரியர் தமிழ்மகனுக்கு ஒரு பெரிய பூங்கொத்து  கொடுக்கவேண்டும். இந்நாவலுக்காக ஆசிரியருக்கு ஜெயந்தன் நினைவு செந்தமிழ் அறகட்டளை விருது கிடைத்துள்ளது அவருக்கு வாழ்த்துக்கள்.  ஒரு நூற்றாண்டில் நடந்த முக்கிய சம்பவங்களை ஒரே புத்தகத்தில் தாண்டி வருவது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. அதை கொஞ்சம் சுருக்கி முக்கிய நிகழ்வுகள் வாயிலாக உண்மையுடன் கொஞ்சம் புனைவையும் சேர்த்து நமது சிந்தனையை அந்த காலகட்டத்தில் பயணிக்க வைத்துள்ளார். நாவலை முடிக்கும் போது தான் ஆசரியரின் முழு உழைப்பின் தாக்கம் வெளிவருகிறது. 



வெட்டுபுலி தீப்பெட்டியில் இருக்கும் படம் தனது தாத்தா தான் என்று சொல்லும் தமிழ் அவன் நண்பர்கள் பிரகாஷ் மற்றும் பெர்னாண்டஸ்சுடன் அதன்   பூர்வீகத்தை தெரிந்துகொள்ள புறப்படுகிறான்.நாற்பதில் ஆரம்பிக்கிறது கதை, தசராரெட்டி, அவர் மனைவி மங்கம்மா,இவர்களின்   வாரிசு லட்சுமணரெட்டி, ஜமிந்தார், அவர் மனைவி, படவேட்டான், ஜப்பான்காரன் குண்டு போடுவான் என்கிற பயத்தில் மயிலாப்பூரில் இருந்து வந்திருந்த அப்புசாமி,அவர் மனைவி, வெள்ளைக்காரன் ஜேம்ஸ் என்று சில மனிதர்களை கொண்டு அந்த காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை ஒரு அத்தியாயத்தில் சொல்லியுள்ளார். நாற்ப்பதுகளில் இருந்த பழக்கவழக்கம், சாலை வசதி, ரயில்வசதி,வட்டார வழக்கு பேச்சுக்கள்,கல்கத்தா செல்ல இருந்த வழித்தடம் என்று முதல் அத்தியாயமே அட்டகாசமாக ஆரம்பம். முக்கியமாக சின்னா ரெட்டி சிறுத்தை புலியை எப்படி கொன்றார் என்று மங்கம்மா சொல்லும் அந்த ஒரு இடம் போதும் நாவலை கொண்டாட. நம் கண்முன் அந்த சம்பவம் நடப்பதை போல மங்கம்மா முலம் விவரித்து இருக்கிறார். படிக்க படிக்க நெஞ்சு திக்கு திக்குன்னு அடித்து கொண்டு இருக்கும் அந்த ரெண்டு பக்கமும் சரியான திரில்லர் .
   

நாவலில் உள்ளே போக போக ஆச்சரியம் இன்னும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. திராவிட கட்சி இந்த நாவலில் முக்கிய ஒரு கதாபாத்திரமாக வருகிறது. நமக்கு எல்லாம் தெரியாத பல விஷயங்கள்  ஆங்காங்கே இணைத்துள்ளார். உதாரணத்துக்கு வேப்ப்ரியில் இருந்த காலி மனையை பெரியாருக்காக காமராஜர் மற்றவர்களிடம் பேசி போட்டி இல்லாமல் அவருக்கே விற்றது. அதில் கொஞ்ச இடத்தை பெரியாரிடம் இருந்து ஆதித்தனார் வாங்கியது. இப்படியான விஷயம் எல்லாம் ஆங் ஆங்கே உள்ளே நுழைத்து வரலாற்றை அழகாக ஒரு புனைவின் முலம் மனதில் பதிய செய்துவிட்டார். 


தசராரெட்டி குடும்பம் மற்றும் ஆறுமுக முதலியார் குடும்பங்களின் வாழ்க்கை தான் நாவலின் மைய ஓட்டம். இந்த குடும்பங்கள் கடந்து வந்த பாதையில்  திராவிட கட்சி வரலாறையும் சேர்த்து நாவல் படிக்கும் போதே திராவிட கட்சியின் வளர்ச்சியை சொல்லி உள்ளார். அதே போல பெரியாரின் கொள்கைகள் மற்றும் பார்ப்பான் எதிர்ப்பை இங்கே நன்றாக காண முடிகிறது.  

புத்தகத்தில் பெரியார் கொள்கையை உயர உயர பறந்து கொண்டு இருக்கிறது. சில இடங்களில் அண்ணாவும் பெரியாரும் நம்மிடம் பேசுவதை போல இருக்கிறது. பெரியாரை விட்டு பிரிந்து சென்ற பிறகு அண்ணா துவங்கிய புதிய கட்சி அதற்கு பெரியார் தான் தலைவர் என்று சொல்லும் இடம். அதை கொண்டு லட்சுமன ரெட்டிக்கும் மணி நாயடுக்கும் நடக்கும் வாதம் எல்லாம் நன்றாக இருக்கிறது. பெரியார் ஏன் அவர் கட்சியை விட்டு அண்ணாதுரை கட்சியில் சேரவேண்டும் ?? காங்கிரஸ் கட்சியை எதிர்த்த பெரியார் பிறகு ஏன் அதை ஆதரித்தார்?? ஜஸ்டிஸ் பார்ட்டியை எதிர்த்த அண்ணா தனி கட்சி தொடங்கிய  பிறகு எதற்கு அதை ஆதரித்தார் ??  இப்படி நிறைய கேள்விகளை எழுப்பி அதற்கு ஒரு பதிலையும் கொடுத்துள்ளார். 

நாற்பதுகளில் சினிமா எப்படி இருந்தது, தற்போது எப்படி இருக்கிறது அன்று இருந்த கொட்டாய், சினிமா செட், ஒவ்வொரு காலகட்டத்திலும் யார் எல்லாம் சூப்பர் ஸ்டாரா இருந்தார்கள். படங்களை எப்படி தயாரித்தார்கள். முதலில் வள்ளி திருமணம் என்று கடவுள் படங்களை எடுத்து வந்த சினிமா எப்படி கொஞ்சம் கொஞ்சமாக தனது நிறத்தை மாற்றியது பாய்ஸ் கம்பெனி, ராமசந்திரன், சிவாஜி, பாலசந்தர், ஸ்ரீதர், ரஜினி, கமல் அறிமுகங்கள் அட்டகாசம்..   




அறுபதுகளில் தமிழகம் என்ன என்ன மாற்றங்களை சந்தித்தது அரசியலில் காங்கிரஸின் வீழ்ச்சி, திமுகவின் எழுச்சி, அண்ணா முதலமைச்சர் ஆனது, மின்சாரம் குக்கிராமத்தை எல்லாம் தொட்டு கொண்டு இருந்தது,,  இப்படி ஒரு எல்லா விஷத்தையும் நாவலின் உலாவும் கதாபாத்திரங்கள் முலம் அழகாக சொல்லி இருக்கிறார். 


நாவலில் சில இடங்களில் குறைகள் இருக்கிறதை செல்லவேண்டும். பெரியார் மற்றும் திமுக பற்றி அதிகமாக பேசியுள்ளதால்  இது அரசியல் புத்தகம் போல ஒரு தோற்றத்தை தருகிறது. அதே போல திமுக வரலாறு பற்றி சொல்லிய அளவிற்கு ஆதிமுக பற்றி அதிகமாக சொல்லவில்லை. தியாகராஜன் வாழ்க்கை முலம் கட்சி கொள்கைகளை வீட்டிற்குள் கொண்டு வந்தால் என்ன விளைவுகளை சம்பாதிக்க வேண்டி வரும் என்று விவரித்துள்ளார். 
   





கொசுறு செய்தி:- இந்த வெட்டுபுலி தீப்பெட்டி கம்பெனி விம்கோ எங்கள் வீட்டுக்கு அருகில் தான் இருக்கிறது. 






வெட்டுபுலி 
ஆசிரியர்-தமிழ்மகன்
உயிர்ம்மை
11/29 சுப்பிரமணியன் தெரு
அபிராமபுரம்
சென்னை-600018.
தமிழ்நாடு
Tele/fax: 91-44-24993448
e-mail: sales@uyirmmai. com



ஆன்லைனில் பெற http://www.uyirmmai.com/Publications/BookDetails.aspx?bid=262


-- 
With Love
Romeo ;)

3 comments:

  1. நல்ல விமர்சனம்

    கேபிள் சங்கர்

    ReplyDelete
  2. பைகா கூட இதைப் பற்றி எழுதி இருந்ததாக நினைவு! :)

    ReplyDelete
  3. நண்பா,
    நல்ல விமர்சனம்,கலக்கிட்டீங்க

    ReplyDelete