முக்கிய
செய்தி : இந்த
பதிவு முழுக்க முழுக்க ஆட்டோ சங்கர் நக்கீரன் வார பத்திரிகையில் தனது இந்த நிலைமைக்கு
யார் காரணம் எதனால் இப்படி ஆனேன் என்கிற ரீதியில் 80 வாரங்கள் தொடராக எழுதியது. இந்த
வார தொடர் பிறகு ஆட்டோசங்கரின்
மரண வாக்குமுலம் என்கிற பெயரில்
புத்தகமாக வந்தது. அந்த புத்தகத்தை பற்றிய எனது பார்வை தான் இந்த பதிவு. சிலர் மாலை
மலர் தளத்தில் காலச்சுவடு பகுதியில் வெளிவந்த செய்திகளை காப்பி பேஸ்ட்
செய்ததை போல இந்த பதிவு இல்லை.
2009 என்று நினைக்கிறேன் புத்தக கண்காட்சியில் தேடோ தேடு என்று
தேடியும் அகப்படாமல் இருந்த ஒரு புத்தகம், எந்த ஸ்டாலிலும் கிடைக்கவில்லை நேரடியாக அந்த
பதிப்பகத்துக்கு போன் செய்து கேட்டும் பார்த்துவிட்டேன் அச்சில் இருப்பதாக
தெரிவித்தார்கள் பல முறை முயற்சி செய்தும் அதே பதில் தான் கிடைத்தது. எதற்கு அந்த
புத்தகத்தை இவ்வளவு தீவிரமாக தேடினேன் என்று தெரியவில்லை,
ஒருவேளை அந்த புத்தகத்தை எழுதியவரின் பெயர் கூட இருக்கலாம். ஒரு சமயம் தமிழ்நாடே ஏன்
இந்தியா முழுக்க இந்த பெயர் மீடியா முலம் பரிச்சமானது - ஆட்டோ சங்கர்
ஒரு மனிதன் தனது வாழ்க்கை முடியும் தருவாயில் கடந்த காலத்தை பற்றி அசை போடுவது என்பது
இயற்கைதான். தனது வாழ்கையை ஒரு
புத்தகமாக எழுத வேண்டும் என்று நினைப்பவன் தன்னை நல்லவனாகவே மற்றவர்களிடம்
காட்டிக்கொள்ள முயல்வான் அப்படி தன்னை ஒரு ராபின்வூட் ரேஞ்சுக்கு
மக்களிடம் காண்பிக்க ஆசைப்பட்ட ஒரு குற்றவாளியின் வாழ்கையை சொல்லும்
புத்தகம். இந்த புத்தகத்தை படிக்கும் முன்னர் வரை ஆட்டோசங்கர் என்றால் நிறைய கொலை
பண்ணியவன், சாயாரம், விபசாரத்தில் கொடிகட்டி பறந்தவன் என்று மட்டும்
தெரியும். ஆனால் அதற்கு யார் பின்புலமாக இருந்து செயல்பட்டவர்கள் எதனால் இப்படி
ஆனான் என்று விலாவாரியா அவனே கொடுத்து இருக்கும் மரண வாக்குமுலம். அதிகாரம்
மட்டும் இருந்தால் போதும் அட்ட்டேன்ஷனில் நின்று சலாம் போட்டு மாமுல் வாங்கவும்
முடியும் அதே ஆளை அலேக்காக
தூக்கி தொங்கவிட்டு அடிக்கவும் முடியும் என்பதற்கு ஆட்டோசங்கரின் வாழ்க்கை ஒரு உதாரணம்.
இந்த புத்தகத்தினுள் போவதற்கு முன், இது தொடராக வெளிவர இருந்த சமயம்/வெளி வந்த
சமயம் நக்கீரன்
பத்திரிகைக்கு என்ன ரீதியான தொல்லைகள் வந்தது அதை எப்படி சட்டப்படி எதிர்
கொண்டார்கள் என்று ஐம்பது பக்கத்துக்கு மேல் விவரித்து உள்ளார் நக்கீரன்
ராஜகோபால். இந்த ஐம்பது பக்கத்தில் இருப்பது சுருக்கமே, சேலேஞ் என்று நக்கீரன் வெளியிட்டுள்ள புத்தகத்தில் விரிவாக
கூறி இருக்கிறார். சேலேஞ் புத்தகத்தை
வாங்க நினைத்தால் கண்ணை முடி கொண்டு வாங்குங்கள். செம விறுவிறுப்பான புத்தகம் அது.
ஜெயலலிதா ஆட்சி என்றாலே நக்கீரன் பத்திரிகைக்கு ஐந்தாண்டு சனி பிடித்துகொள்ளும், ஆறு கொலைகள் செய்த குற்றவாளி, பெரிய லெவெலில் சாராயம் மற்றும் பெண்களை வைத்து
பிசினஸ் செய்தவன், அமைச்சர்கள்
உயர் போலீஸ்
அதிகாரி, லோக்கல்
போலீஸ்காரர்களிடம் நெருக்கமான தொடர்பு வைத்து இருந்தவன் தனது வாழ்கையை பற்றி எழுதுகிறான் அதுவும் நக்கீரன் என்றால்
சும்மாவா விடுவார்கள். உளவு துறை கண்டிப்பாக அப்போது முதலமைச்சராக இருந்த
ஜெயலலிதாவிடம் ரிப்போர்ட் கொடுத்து இருக்கும் அதில் கண்டிப்பாக எந்த எந்த தலைகள்
உருள போகிறது என்று நோட் செய்து இருப்பார்கள், அந்த சமயத்தில் உயர் அதிகாரியாக இருந்தவர்கள் செய்த செயலால் ஆட்சிக்கு கெட்டபெயர் ஏற்படும்
என்கிற காரணத்தால் கூட (!) எந்த விதத்திலாவது அந்த தொடரை தடை செய்ய முயற்சி
எடுத்து கொண்டு இருந்தார்கள். ஒரு பக்கம் சிறைத்துறை கடிதம் முலம் நெருக்கடி
கொடுக்க மறுபுறம் நக்கீரன் கோபால் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவிற்கு
இந்திய பத்திரிகையே கொண்டாடும் அளவிற்கு ஒரு தீர்ப்பை அளித்துள்ளார்கள் நீதிபதிகள்.
இந்த களோபரங்களுக்கு நடுவில் ஆட்டோ
சங்கர நெருக்கிய சிறைத்துறை அதிகாரிகள், சங்கரின் மனைவியை மிரட்டி பணியவைத்த முன்னாள் சபாநாயகர் முனு ஆதி ஆட்கள் ஒருபுறம்
தடைகள் அதிகமாகி கொண்டு இருந்த நேரத்தில் தான் அந்த தீர்ப்பு வெளிவந்து
இருக்கிறது. தீர்ப்பு வெளிவந்த பிறகு சிறைத்துறையில் இருந்து வந்த கடிதத்தில்
அப்படியே அந்தர்பல்டி அடித்து இருகிறார்கள் அதிகாரிகள்.
இனி புத்தகத்தை பற்றி பார்ப்போம். இந்த
புத்தகத்தை பயோக்ராபி என்பதை விட ஆட்டோபயோக்ராபி என்னலாம். அவன் எழுதி
கொடுத்த 300 பக்க நோட்டில் உள்ளதையும் அவன் நேரடியா கூறிய பல சம்பவங்களை தொகுத்து
வெளிவந்தது .
போலீஸ் நினைத்தால் ஒரு நிரபராதியை சுலபமாக குற்றவாளியாக முடியும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன், இந்த புத்தகம் படிக்கும் போது அது உண்மையோ
என்று நினைக்க தோன்றுகிறது. சங்கரின் குழந்தை பருவம் என்பது வேதனையாகவே இருந்து
இருக்கிறது, தனது எட்டாவது
வயதில் இரண்டு மனைவிகளை விட்டுவிட்டு அப்பா வேறொரு பெண்ணை ஓடி விடுகிறார், அடுத்த வருடம் அவனின் அம்மா வேறொருவருடன் ஓடி
விடுகிறாள். பெரியம்மாவிடம் வளரும் சங்கர் தனது பால்ய வயதில் ஜெகதீஸ்வரி என்கிற
பெண்ணை கல்யாணம் செய்து கொள்கிறான். இதில் ரொம்ப ஆச்சரியம் தரும் தகவல் அந்த
கல்யாணத்தை நடத்தி வைத்தது கிருபானந்த வாரியார். அப்போது சங்கருக்கு 18 வயது அவன்
காதலிக்கு 14. சங்கரின் இளமை காலம் முழுக்க கஷ்டத்திலே நகர்ந்து இருக்கிறது, ஒருவேளை சாப்பாடு இல்லாமல் இருவரும் இருந்த
நாட்கள் அதிகம் எப்படியோ காந்தி மண்டபத்தில் ஒட்டடை அடிக்கும் வேலை கிடைக்க அதை
வைத்து பிழைத்து கொண்டு இருக்கிறார்கள். சென்னையில் புயல் மழை என்று விடாத
நாட்களில் மனைவி குழந்தை பசியால் வாடுவதை பொறுக்க முடியாமல் நாடார் கடையில்
ஒரு கிலோ அரிசி கடனாக கெஞ்சி கேட்க அவரோ தர முடியாது என்றும் அந்த நேரத்தில் வந்த
போலீஸ்காரர் ஒருவரிடம் இவன் என்னை மிரட்டுகிறான் என்று போட்டு கொடுக்க, அந்த போலீஸ் இவனை அந்த மழையில் லத்தியால் வெளுக்க, அழுகையுடன் வீட்டுக்கு திரும்பும் சங்கர், வேறொருவரிடம் கடன் வாங்க அதே நாடார் கடை
வழியாக செல்லும் போது போலீஸிடம் வாங்கிய அடிகளை நாடாரிடம் திருப்பி கொடுத்து கொஞ்சம் அரிசியை அவனே
எடுத்து செல்கிறான். ஆட்டோ சங்கர் என்கிற ஒருவன் இந்த சமயத்தில் தான் பிறந்தான்
என்கிறான் சங்கர். ஒரு கிலோ அரிசி தான் ஒரு மனிதனை மிருகமாக ஆக்கியது என்றால் நம்ப முடிகிறதா அந்த சமயத்தில் தான் ஆட்டோ சங்கர்
உருவான தினம் என்கிறான்.
இந்த
புத்தகத்தில் அதிர்ச்சிகரமான பல செய்திகள் உள்ளது. படிக்க படிக்க வாயை பிளக்கும்
அளவுக்கு செமையான புத்தகம். ஆட்டோவில் கள்ளசாராயத்தை ஏற்றி கொண்டு கோட்டைக்கே
சென்றது. எண்பதுகளில் சினிமாவில் கொடி கட்டி பறந்த கதாநாயகிகள் யார் யார்
ப்ராதல் செய்து கொண்டு இருந்தார்கள் அவர்களின் ரேட் என்ன. குட்டை சாந்தி என்கிற பெயரில்
வளம் வந்து மிக பெரிய போலீஸ்காரரை வழைத்து போட்ட பெண்மணி பின்னால் விஜயசாந்தி ஆனது.
சினிமாவில் பெரிய ஆளாக வேண்டும் என்பதற்காகவே விபசாரத்தில் ஈடுபட்ட டிஸ்கோ சாந்தி. விபசார
பெண்களுடன் எடா கூடமாக இருந்த பெரிய தலைகளை போட்டோ பிடித்து வைத்திருந்தது. ஒரு காலத்தில்
பெரிய பெரிய நடிகர்களை வைத்து படமெடுத்த ஜி.என் .வேலுமணி பேத்தி விபச்சாரி ஆனது.
சங்கர்
சறுக்கிய இடம் எதுவாக இருந்தாலும் அதில் இருந்து தப்பிக்க சரியான முறையை அவன் கையாளவில்லை.
எத்தனையோ அடியாட்களை வைத்து இருந்தாலும் ஒரு புத்திசாலியான லாயரை வைத்து கொள்ளவில்லை.
இன்று அரசியல், பிசினஸில் கொடிகட்டி பறக்கும் பல மனிதர்களின் இருண்ட பக்கத்தை பார்த்தல்
பகீராக தான் இருக்கும். மூடி மறைத்த விஷயங்கள் எவ்வளவோ இருக்கலாம், ஆனால் அதை
தோண்ட ஆரமித்தால் ஒன்றுமே இருக்காது அடையாளமே தெரியாமல் அழித்து இருப்பார்கள்.
இந்த புத்தகத்தில் உள்ளதை உள்ளபடி எழுதியுள்ளான் என்பதை எப்படி நம்புவது
என்று தெரியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை. தனக்கு துரோகம் இழைத்த போலீஸ்
ஆட்கள் சுகுமார், இன்ஸ்பெக்டர் தலைமலை, டி.எஸ்.பி. தங்கைய்யா. குட்டை சாந்தியை
கேட்டதற்காக சங்கரை தொலைத்து விடுவதாக மிரட்டிய தேவாரம். சபாநாயகர் முனு.ஆதி,
சில அமைச்சர்கள் இப்படி அவர்கள் பெயரை தெளிவாக சொல்வதால் இதை
அவ்வளவு சீக்கிரத்தில் ஒதுக்கி முடியாது.
சங்கர்
தனது வாழ்க்கை முழுக்க செய்த தப்புகள் ஒரு பக்கம் நீண்டு கொண்டே சென்றாலும் தனது கடைசி
நாளில் தூக்கு மேடைக்கு போகும் அந்த கடைசி அத்தியாயத்தை படிக்கும் போது அவன்
மேல் ஒரு வித இறக்கம் வருவதை நிறுத்த முடியவில்லை.
இந்த
புத்தகத்தில் அதிகபடியான வசனங்கள் உள்ளது. சங்கர் இல்லாத இடத்தில மற்றவர்கள் பேசியதை
அவனே சொல்லுவது போல இருப்பது புத்தகத்தை பற்றிய நம்பிக்கையை யோசிக்க வைக்கிறது.
சில சில குறைகள் இருந்தாலும் ஆட்டோ சங்கர் தனது வாழ்கையில் செய்த குற்ற
செயல்களை பற்றி ஊடங்கங்களில் வந்த செய்தியை விட மாறுபட்ட செய்தியை தெரிந்து கொள்ளலாம்.
புத்தகத்தின் பெயர் : ஆட்டோசங்கரின் மரண வாக்குமுலம்
வெளியீடு : நக்கீரன்
பதிப்பகம்,சென்னை
மேலும் தகவலுக்கு: http://nakkheeranpublications.in/categories.php?cat_id=3
அன்புடன்
அருண் மொழித்தேவன் (Romeo) ;)