Friday, February 25, 2011

சங்கதிகள் 25-02-2011

பல்வேறு எழுத்தாளர்களின் கைவண்ணத்தில் அடுத்து அடுத்து வித்தியாசமான கதையம்சம்  உள்ள புத்தகங்களை படிப்பது நல்லா தான் இருக்கு. இனி புத்தகத்துக்கு முக்கிய இடம் குடுத்து பதிவு எழுதவேண்டும் என்று நினைத்து உள்ளேன். மகாவும் ஜூனியரும் 20 நாள் ஊருக்கு போய் இருந்த சமயத்துல 12  புத்தகம் படிச்சேன். அவங்க திரும்ப வந்து ஒரு மாசம் ஆகா போகுது ஒரே ஒரு புத்தகம் தான் படிச்சி முடிச்சி இருக்குறேன் :(. இதை மகா கிட்ட சொல்லி புலம்பினா இதான் சாக்குன்னு நான் வேணும்னா அம்மா விட்டுக்கு போகட்டுமான்னு கேக்குற. 


----------------------------------------------------------------------------------------------------------------------------------
  
தேகம் பதிவை சாருவிற்கு அப்படியே மெயில் பண்ணினேன் அவரின் நாவலை எப்படி வேண்டும் என்றாலும் விமர்சனம் செய்யலாம் என்று பதில் வந்தது ஆனால் அவரின் ப்ளாகில் எனது விமர்சனத்தை பற்றி மூச் விடவில்லை. ஜால்ரா அடித்தால் மட்டுமே அது எல்லாம் சாத்தியப்படும் என்று தேகத்தை நடு மண்டையில் வைத்து கொண்டாடுபவர்களின் பதிவின் லிங்க் குடுக்கும் போது தான் தெரிகிறது (இதில் லக்கி விதிவிலக்கு, தேகத்தை பற்றி அவரின் விமர்சனத்தில் நிறையவே  உடன்படுகிறேன்). பரிசல் கிருஷ்ணாவிடம் இருந்து ஒரு பின்னுடமாவது  வரும் என்று நினைத்தேன். பச் இல்லை, ஆனால் குகனின் பின்னுடத்தில் நான் வைத்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் தந்து இருக்கிறார். 

----------------------------------------------------------------------------------------------------------------------------------

முன்னதுக்கும்  அதிகமா பெரும் மொக்கை போட்டு  கொண்டு இருந்த இரண்டு பதிவர்களை கூகுள் ரீடரில் பிளாக் செய்துவிட்டேன். யப்பா ஏன் இந்த கொலைவெறி என்று தெரியவில்லை. ஒரு நாளைக்கு ஒரு பதிவை கண்டிப்பா போட்டே ஆகவேண்டும் என்று எதாவது வேண்டுதலா  என்று தெரியவில்லை. தினமும் கூகுள் ரீடரில் அந்த பதிவரின் புதிய பதிவின் பெயரை கண்டாலே செம எரிச்சல் ஆகிறது. ப்ளாக் என்பது ஒருவித போதை என்று கூட சொல்லலாம். முதலில் எழுத எழுத நாம் ஏதோ எழுத்தாளன் ஆகிக்கொண்டு வருகிறோம் என்று நினைப்பு வந்து அதற்கு நாம் அடிமை ஆகிவிடுகிறோம். கொஞ்ச நாள் சென்ற பிறகுதான் அவர்களின் நிலைமை புரியும். பின்னுடம் எல்லாம் போதைக்கு ஊறுகாய் என்று இப்பொது தெரியாது. தெரிந்த பிறகு நான் சொன்னது எவ்வளவு உண்மை என்று புரியும். பதிவு எழுதுங்க அது உங்கள் விருப்பம் ஆனால் உங்கள் பதிவே மற்றவர்கள் உங்களை திட்டும் அளவுக்கு தாழ்த்தி கொள்ளாதிர்கள்.  புரிந்தவர்களுக்கு புரிந்தால் சரி.  

----------------------------------------------------------------------------------------------------------------------------------

எங்க ஏரியால இறந்து போன ஒரு நண்பனுக்காக அவரின் நண்பர்கள் அவருக்கு 15ஆம் நினைவு நாள் அன்று மெயின் ரோடுக்கு பக்கத்தில் எல்லோருக்கும்  கண்ணில் படுவதை போல பெரிய  ப்ளெக்ஸ் போர்டு வைத்து இருகிறார்கள்.கொடுமை என்னவென்றால் நண்பனுக்கு அஞ்சலி செய்கிறேன் என்று நினைத்து அவனை காமெடி பீஸ் ஆக்கியது தான்.   இறந்து போன அந்த இளைஞனின் வயதோ 20 கூட இருக்காது. அவரின் முகத்தை மட்டும் வெட்டி எடுத்து அழகிய தமிழ் மகன் படத்தின் இரண்டு மூன்று போடோக்களை கிராபிக்ஸ் செய்து அதை பெரிய பெரிய போர்டுகளாக்கி  மெயின் ரோட்டில் வைத்து உள்ளார்கள். ஒவ்வொரு முறை அந்த இடத்தை கடந்து செல்லும் போது எல்லாம் இது என்னடா காமெடி என்று நினைக்க தோன்றுகிறது. எனக்கு மட்டும் இல்லை எனது நண்பர்கள் சிலரும் இதை பார்த்து இது என்ன காமெடியா இருக்கே என்று சொன்னார்கள்.  முதலில் எல்லாம் கண்ணீர் அஞ்சலி என்று கருப்பு வெள்ளை போஸ்டர் சில இடத்தில் தென்படும். டெக்னாலஜி உயர உயர அஞ்சலி முறையும் மாறுகிறது. 

இவர்கள் என்று இல்லை வட சென்னை முழுக்க இந்த ப்ளெக்ஸ் போர்டு கலாசாரம் புற்றிசல் போல முளைத்து இருக்கிறது. ஒரு வீட்டில் நல்லதோ கேட்டதோ எது நடந்தாலும்  மற்றவர்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. மெயின் ரோட்டில் அந்த நிகழ்வை பற்றி ஒரு ப்ளெக்ஸ் போர்டு கண்டிப்பாக இருக்கும். கல்யாணம் என்றாலும் சரி கருமாதி என்றாலும் சரி. என்னுடன் ஸ்கூலில் ஒன்றாக படித்த நண்பனின் புகைப்படத்தை ஒரு கல்யாண மண்டபத்தின் வாசலில் பார்த்து தான் அவனுக்கு கல்யாணம் என்று தெரிந்து கொண்டேன். 

----------------------------------------------------------------------------------------------------------------------------------


இரண்டு வாரத்துக்கு முன் நடந்த தோல் பொருள் கண்காட்சியில் பங்கேற்க நண்பர்கள் எல்லாம் சென்னை வந்து இருதார்கள். அப்போ ஒரு நாள் நைட் கிண்டில இருக்குற டாஸ்மாக் ஷாப்ல எல்லோரும் மீட் பண்ணோம். ஒரு நண்பன் AC பாருக்கு போகலாம்ன்னு சொல்லிட்டு முதலில் போய் டோக்கன் வாங்கிட்டு வந்தான். ஒரு ஆளுக்கு 20 ருபாய், அதும் ஒரு மணி நேரத்துக்கு தான். அதுக்கு அப்பறம் அங்க போய் சீட்ல பத்து பேரும் உக்காந்து இருந்தோம். பார் அட்டண்டர் ஒருத்தன் வந்து என்ன வேணும்ன்னு தூய சென்னை பாஷைல பேசுனான். பீர் ஆர்டர் பண்ணணுங்க. நான் அன்னிக்கு ஆபீஸ் போயிட்டு இருந்தேன் போற வழியில இவ்வங்கள பார்க்கலாம்ன்னு தான் வந்தேன். வந்த எடத்துல இந்த கொடுமை எல்லாம் பார்கவேண்டியாத இருந்துச்சு. ஒரு பீர்ரின்  ஒரிஜினல் விலை 70 ரூபா தான், அங்கேயோ 95 ரூபா !!!.. அடபாவிங்களா இப்படி கண்ணனுக்கு முன்னாடியே கொள்ளை அடிகிறான்களேன்னு நொந்து போய்ட்டாங்க பசங்க எல்லாம். இதுக்கு பக்கத்துல இருந்த ZEN Garden போங்கடா சொல்லிட்டு வந்தேன். வைன் ஷாப் எல்லாம்  பேசாம பிரைவேட் பார்டிங்க கிட்டயே இருந்து இருக்கலாம். 


இதில் ஒரு நல்ல செய்தி என்னவென்றால் " நான் தண்ணி அடிக்கிறது இல்லை" என்பது தான். 


கேட்ட செய்தி நான் சொன்னதை என்னோட நண்பர்கள் ஒருத்தனும் நம்பவே இல்ல !!!  

----------------------------------------------------------------------------------------------------------------------------------
சித்த வைத்தியம் என்றாலே அஜால் குஜால் மேட்டருக்கு வைத்தியம் பார்க்குறதுன்னு ஒரு தோற்றம் உருவாகிவிட்டது போல இருக்கே இல்ல இந்த சேலம் வைத்தியர் சித்த வைத்தியம் என்றாலே அதுக்கு தான் என்பது போல டிவில பேசி பேசி மக்களை அந்த மனநிலைக்கு கொண்டு வந்துட்டாங்களா!!!!. ராத்திரி பத்து மணிக்கு மேல முக்காவாசி டிவில சித்த வைத்தியம் பத்தி தான் பேசிட்டு இருக்காங்க. முக்கியமா அஜால் குஜால் மேட்டர் தான். எல்லாத்துக்கும் டிவி சேனல் வந்தது மாதிரி இவங்களுக்கும் ஒரு சேனல் வந்துட்டா நல்லா இருக்கும்.




சினிமா தெரியுமா நிகழ்ச்சியை போல தினமும் ஜோதிட பலன்னு ஒரு நிகழ்ச்சி ராஜ் டிவில  போடுறாங்க. ஒரு அம்மிணி கைல பெரிய சீட்டு கட்டை வச்சி போன் பேசுறவங்க கிட்ட பேரு, வயசு, இடம் எதுவும் கேக்குறது இல்ல. அவங்க கிட்ட பிரச்னையை மட்டும் சொன்னா போதும் அங்க முன்னாடி பரப்பி வச்சி இருக்கும் சீட்டு கட்டுல இருந்து நாலு கார்ட்டை உருவி  அவங்க பலன் சொல்ல ஆரமிச்சிடுவாங்க. இது என்னடா டகால்டின்னு கொஞ்ச நேரம் பார்த்தேன், புளுகு முட்டையை அவுத்து விடுறாங்க பாருங்க கேக்க கேக்க டெர்ரரா இருக்கு. தமிழ்நாடு ஆளுங்க பார்த்தா என்ன கேணயனா தெரியுதா ?? விட்டா உங்க பட்டாப்பட்டி கலர் மட்டும் சொல்லுங்க உங்க எதிர் காலம் எப்படி இருக்குன்னு அடுத்து வேற எவனாவது சொன்னாலும் சொல்லுவாங்க. இந்த மாதிரியான வெத்துவேட்டு  நிகழ்ச்சியை ஒளிபரப்பி தங்கள் நிறுவனத்தின் பெயரை ராஜ் டிவி கெடுத்துட்டு இருக்குறாங்க.   










--
With Love
Romeo ;)

Monday, February 14, 2011

அவளோ!!





ஐந்து அடி எட்டு அங்குலம் உயரம் 
உயரத்துக்கு ஏற்ற உடல்வாகு 
குதிரை வால் போல அசைந்து 
ஆடும் முடி 
நடையில் ஒரு தெனாவட்டு.

முன்னால் செல்லும் பெண் 
இந்த அம்சங்களை கொண்டு இருந்தாள் 
மனம் ஏனோ அவளாக இருப்பாளோ !!!
என்று நினைக்க தோன்றுகிறது. 

கடந்து சென்று 
ஓர கண்ணில் பார்க்கிறேன் 
நல்ல வேலை 
அது அவளில்லை. 

சின்னதாக ஒரு ஏமாற்றம் 
ஏற்படும் போது 
பெரியதான சந்தோஷமும்  ஏற்படுகிறது 
அது அவளாக இல்லாத 
வரை நான் நானாக இருப்பேன். 

அவளை பார்க்காத வரை
நான் யாரோ!!!  



--
With Love
Romeo ;)

Friday, February 11, 2011

அள்ளிக்கோ அள்ளிக்கோ கிழக்குல அள்ளிக்கோ

எச்சரிக்கை சென்னைக்கு வெளியவோ அல்லது  இந்தியாவுக்கு  வெளியவோ  புத்தக புழு யாராவது  இந்த பதிவை படித்து வயிறு எறிந்தால் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது

நேத்து சுரேஷ் கண்ணாவின் கிழக்கு நூல்கள் - மிகக் குறைந்த விலையில் பதிவை படித்ததும் அதில் அவரு சொல்லி இருந்த விலையை பார்த்ததும் மனசு லபோ திபோன்னு குதிக்க ஆரமிச்சிடுச்சு. கொய்யாலா இவ்வளவு சல்லியா கிடச்சா விடுவோமா ??

நைட் ஷிப்ட் முடிஞ்சி விடிய காலை 3.30 மணிக்கு வீட்டுக்கு போய்ப்படுதேன். 8.30 மணிக்கு ஜூனியர் சேட்டை செஞ்சதால தூக்கம் கலைஞ்சது. மகா கிட்ட ஒரு காபி வாங்கி குடிச்சிட்டு கிளம்பினேன். போகும் போதே எங்க போறீங்க என்கிற கேள்வி வருவதற்கு முன்னால்  நானே மகா கிட்ட புக் ஸ்டால்க்கு போறேன்னு சொன்னேன். ஏன் வாங்கி வச்சி இருக்குற புக் எல்லாம் படிச்சி முடிச்சாச்சா என்கிற கேள்விக்கு பதிலாய் பா.ரா நேற்று சொல்லி இருந்த கறை நல்லது எடுத்து விட்டு கிளம்பினேன். மயிலாப்பூர் கடைக்கு போய் பார்த்தேன், நான் தான் முதல் கஸ்டமர் இருந்த புத்தகம் எல்லாம் ஒண்ணு ஒண்ணா கைல எடுத்து எடுத்து பார்த்தேன். முதலில் பிரமிப்பு தான் ஏற்பட்டது. இவ்வளவு சீப்பா பழைய கடைல கூட கிடைக்காதே இவங்க எப்படி போட்டு விக்கிறாங்கன்னு !!!


அள்ளி கொண்டே இருந்தேன் கை வலிச்ச உடனே கல்லா பெட்டியில் இருந்தவர் கிட்ட குடுத்து பில் போட சொல்லிட்டு அடுத்த ரவுண்ட் போயிட்டு வந்தேன். மொத்தம் 23 புத்தகம் Rs.445 தான் ஆச்சு .. நம்பவே முடியல.  மயிலாப்பூர்ல இல்லாத புத்தகம் சிலது தி.நகர்ல இருக்கும்ன்னு கடை சிப்பந்தி சொன்னாரு. சரி சயந்திரம் ஆபீஸ் போகும் போது போலாம்ன்னு கிளம்பிட்டேன். நைட் கடை அடைகிற நேரத்துல நான் போனேன். (காலைல முதல் ஆள் மாலையில் கடைசி ஆள்). உள்ளே போகும் போதே யுவகிருஷ்ணா, அதிஷா, பாஸ்கர் மூணு பெரும் ஆடி தள்ளுபடியில் அண்ணாச்சி கடைல அள்ளினது மாதிரி ஆளுக்கு ரெண்டு பை எடுத்துட்டு வெளிய வந்துட்டு இருக்காங்க. அவங்க கிட்ட ரெண்டு வார்த்தை பேசிட்டு சில புத்தகம் வாங்கலாம்ன்னு எடுத்து வந்து பில் போட குடுத்தேன். அப்பத்தான் தெரிஞ்சது பாக்கெட்ல பைசா இல்ல !!!! ATM சென்டர் கூட பக்கத்துல இல்ல அவர்கிட்ட அந்த புத்தகம் எல்லாம் எடுத்து வையுங்க நாளைக்கு வந்து வாங்கிறேன்னு  சொல்லிட்டு வந்தேன். 


உண்மையில் இங்க வாங்கிய புத்தகம் எல்லாம்  ஒரு லக் தான். 100 ருபாய் குடுத்து வாங்கிய புத்தகம் எல்லாம் 20 ரூபாய்க்கு கிடைக்கும் போது மலைப்பாக இருக்கிறது. ஸ்டாக் தீர்ந்து கொண்டு  இருக்கு. முதலில் மயிலாப்பூர்ல போங்க அங்க தான் நிறைய புத்தகம் இருக்கு. அதுக்கு அப்பறம் தி.நகர் வாங்க அங்க இல்லாத புத்தகம் சிலது இங்க கிடைக்கும். சுஜாதாவின் இரண்டு புத்தகங்களை மயிலாப்பூரில் பார்த்தேன். தி.நகரில் சுஜாதா புத்தகம் எதுவும் கண்ணில் படவில்லை.  

வாங்கிய புத்தகங்கள் 

புவி - (புத்தக  விலை) தவி - (தள்ளுபடி விலை)  

ரெயினிஸ் தெரு - வண்ணநிலவன் - புவி - 70 /  தவி - 20 
வயிறு எரியுதா - டாக்டர். எல். ஆனந்த் -  புவி - 70 /  தவி - 20   
ISI - பா. ரா - புவி - 80 /  தவி - 20
மாயமான் வேட்டை - இ.பா. - புவி - 100 /  தவி - 20  
குணசித்தர்கள் - க.சீ.சிவகுமார் -  புவி - 125 /  தவி - 30
தீவுகள் -  இ.பா. - புவி - 125 /  தவி - 30  
உமர் -   புவி - 150 /  தவி - 30  
அமீனா - தருமி - புவி - 200 /  தவி - 70  
அக்னி - இ.பா. - புவி - 70 /  தவி - 20 
சைக்கிள் முனி - முருகன் - புவி - 60 /  தவி - 15 
கூவாகம் கூத்தாண்டவர் -  புவி - 60 /  தவி - 5 
காலச்சிற்பியின் கைகளில் - புவி - 120 /  தவி - 20 
ராயர் காப்பி கிளப் - முருகன் - புவி - 65 /  தவி - 20 
கால் முளைத்த மனம் - புவி - 60 /  தவி - 10 
என் நிலைக் கண்ணாடியில் உன் முகம் - சொக்கன் - புவி - 60 /  தவி - 10
ஆல்பா - புவி - 50 /  தவி - 10
திபெத் - மருதன் - புவி - 80 /  தவி - 30
இரவுக்கு முன் வருவது மாலை - ஆதவன் - புவி - 120 /  தவி - 20      
டார்ஜிலிங்கில் ஒரு அபாயம் - சத்யஜித்ரே - புவி -  /  தவி - 5 
கோபுரம்தாங்கி - புவி - 60 /  தவி - 10 
மழைருசி - புவி - 60 /  தவி - 10
கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன் - புவி - 60 /  தவி - ௧௦
பின்கதை சுருக்கம் - பா.ரா - புவி - 50 /  தவி - 10

முந்துங்கள் ஸ்டாக் உள்ளவரை மட்டுமே புத்தகம் சலியான விலையில் கிடைக்கும்.   



--
With Love
Romeo ;)

Wednesday, February 9, 2011

கனவு



மறுத்து போன ஒவ்வொரு 
கனவும்  
மனம் சொல்லும் ஒவ்வொரு 
சொல்லும் 
மனதில் கவ்வும் ஒவ்வொரு 
பயமும்   
ஏந்தி  கொண்டு
செல்கிறேன் 

இமைகள் முடும் 
அந்த கணநேரம்  
எல்லாம்  

எனக்கே உருவான 
கனவுலகில் 
சென்றுவிடுவேனோ !!!
என்கிற பயம் 
வரும் போது 
எல்லாம் 

குடும்ப நபர்களின் முகங்கள் 
நினைவில் வரும்போது 
எல்லாம் 

எனது கனவுகளை 
பரண் மேல் 
ஏற்றி விடவேண்டியதாக 
இருக்கிறது 
 
- - - - - - - - - - - - - - - - - - - - - -

தூர தெரியும் 
நிலவை பிடிக்க
பறந்து செல்லும் 
பறவையை பார்க்கும் 
போது 
எல்லாம் 

நான் ஒரு 
தவளையாக 
பிறந்து இருக்கலாம் 
என்கிற  எண்ணம் 
வரும்  போது 
எல்லாம்

நினைத்து கொண்டு 
இருக்கிறேன்  
ஏன் இந்த ஈன பிறப்பு என்று 


பார்க்கலாம் நாளை 
எனது கனவுகளை 
புதுபிக்கும் நாள்
வந்தாலும் வரும்
அல்லது 
வராமலும் போகும்


--
With Love
Romeo ;)
  

Tuesday, February 1, 2011

மீண்டும் ஒரு காதல் கதை - சங்கர நாராயணன்

மீண்டும் ஒரு காதல் கதை - சங்கர நாராயணன் 


                                      

ஷரத்தா என்கிற பெண்ணை முக்கிய கதாபாத்திரமாக உலாவ விட்டு அவள் மூலம் கதையை நகர்த்தி செல்கிறார். இந்த ஷரத்தா எப்படி பட்ட பெண் என்று கிரகிக்க முடியவில்லை. முதல் அத்தியாத்தில் ஷங்கரை (கேபிள் சங்கரோ ????) முறைத்து கொண்டு சென்று விட்டு அடுத்த அத்தியாயத்தில் அவனிடம் மன்னிப்பு கேட்கிறாள். தனது முடிவுகள் சரி என்றே நினைக்கும் ஒரு வித   மனப்பான்மை கொண்ட பெண்ணாக சித்தரித்து இருக்கிறார். வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிட்டு பிறகு வேண்டும் என்று கெஞ்சுவது. It's Like a Psycho Girl ???  அப்படி எல்லாம் சொல்லிவிட முடியாது, இவளை போல நிறைய பெண்கள் இருகிறார்கள் அவர்களை எல்லாம் Psycho என்றால் உலகத்தில் மனநல மருத்துவம் நல்ல தொரு வியாபராமாக இருக்கும். ரெண்டு கெட்டான் புத்தி உள்ளவள் என்று சொல்லலாம்.  மேல் தட்டு மோகத்தில் வாழும் ஒரு பெண்ணை நடமாடவிட்டு இருக்கிறார். 

சில பகுதிகளை படித்த பிறகு ஷங்கரின் கதாபாத்திரத்தை ஆசிரியர் கொஞ்சம் குழப்பி விட்டார் என்று சொல்லலாம். முந்தின அத்தியாயத்தில் தனது அம்மாவின் யோசனை படி ஒருவேளை சினிமாவுக்குள் செல முடியவில்லை என்றால் வேலைக்கு செல்ல தயாராக இருக்கிறான். ஆனால் அடுத்த அத்தியாயத்தில் ஷரத்தா அவனுக்கு அமெரிக்காவில் தனது அப்பாவின் கம்பெனிலே வேளை வாங்கி தருகிறேன் என்று சொல்லும் போது சினிமா கனவு தகர்ந்து போய்விடுகிறது என்று நினைக்கிறான். அதன் காரணமாக இருவரும் பிரிகிறார்கள்.  ஏன் இந்த முரண் ?? கதையை எப்படி முடிக்கலாம் என்கிற யோசனையில்  முந்தைய அத்தியாயத்தில் எழுதியதை மறந்துவிட்டாரா கேபிளார்!!!  

கேபிள் சங்கர் எங்க இருந்து தான் ஷரத்தா என்கிற பெயர் மாட்டுச்சோ !!!  சில பெயர்களை கேட்டால் மனதில் நமக்கு தெரியாமலே அது பதிந்து விடும். அது போல இந்த பெயரும் நன்றாக பதிந்துவிட்டது.. 

ஒரு நாவலை மீள் வாசிப்பு செய்யும் போது முதலில் படித்ததை விட அதை வேறு ஒரு கண்ணோட்டத்தில் வாசிக்க வாசிக்க கொஞ்சம் நெருக்கமாக, கொஞ்சம் சுவாரசியமாக இருக்கும் (இருக்கலாம் / இல்லாமலும் போகலாம்). ஏற்கனவே கேபிளின்  வலைதளத்தில் மீண்டும் ஒரு காதல்  கதையை  படித்ததால்  இந்த குறு நாவலும் மீள் வாசிப்பு என்கிற கட்டத்தில் தான் அணுக முடிந்தது.   

மீண்டும் ஒரு காதல் கதை - something is missing don't know what's that !!! 



சிறுகதைகள்

 குறுநாவலை விட சிறுகதைகள் ரொம்ப சுவாரசியமாக இருக்கிறது.  நீங்க இந்த மாதிரி  பண்ணதேயில்லையா சார் கதை நச்சுன்னு மனசுல உட்கார்ந்துவிட்டது. சிறுகதை தொகுப்பில் இது தான் ரொம்ப சின்ன கதை,  கதையின் தலைப்பை வைத்தே கடைசியில் முடித்து இருக்கிறார். படித்து முடித்தவுடன் நான் இந்த மாதிரி ஏதாவது செய்து இருக்கேனா என்று யோசித்து கொண்டு இருந்தேன். 

காக்கை, குண்டம்மா பாட்டி,  அப்துல்லா,சிவா,டேனியல், அப்பறம் தலைப்பு மறந்து போன மூன்று கதைகள் நன்றாக இருந்தது. 

சுத்தமா பிடிக்காதது முற்றுபுள்ளி என்கிற கதைதான். கள்ளகாதல் பற்றி இவ்வளவு வழிச்சு எழுதி இருக்க வேண்டாம். படிக்க படிக்க இந்த கதை தேவையில்லாதது போல தோன்றியது. 


கிளைமாக்ஸ்

கேபிள் ஷங்கருக்கு சிறுகதைகள் நன்றாக எழுத வருகிறது அதனால் இனி இந்த மாதிரியான கதைகளை பதிவில் எழுதாமல் சிறுகதை தொகுப்பையோ அல்லது  நாவலையோ தனியாக வெளியிட்டால் நல்லது. ஒவ்வொரு கதையையும்  படிக்கும் போது ஏற்கனவே படித்ததாக  இருந்ததால் மீள் வாசிப்பு  என்கிற அளவில் தான் எல்லாவற்றையும் அணுக வேண்டி இருக்கிறது. புதிதாக ஏதும் இல்லை என்பதால் சுவாரசியம் அவ்வளவாக இல்லை. அதுவும் இல்லாமல் அவரின் வலைத்தளத்தில் இந்த கதைகள் இன்னும் இருப்பதால் எதற்கு காசு குடுத்து வாங்கி படிக்க வேண்டும் என்று நினைப்பு வருவதை நிறுத்த முடியவில்லை. 

"ழ" பதிப்பகம் சார்பாக கே.ஆர்.பி. செந்தில் பதிப்பாளர் என்கிற புது அவதாரத்தை எடுத்து உள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள். புத்தகத்தின் முகப்பு நன்றாக உள்ளது அதே போல பைண்டிங் நன்றாக இருக்கிறது. புத்தகத்துக்கு 90 ருபாய் என்கிற விலை வைத்தது எதனால் என்று தெரியவில்லை.   விலையை கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.  

அவசரம் அவசரமாக ப்ரூப் பார்க்காமல் புத்தகத்தை அச்சிட்டு இருகிறார்கள் என்று ஈஸியாக தெரிந்து கொள்வதற்கு நிறைய இடங்கள் வாலண்டியராக அதுவாகவே  கண்ணில்படுகிறது . 

உதாரணத்துக்கு 

மீண்டும் ஒரு காதல் கதை - அத்தியாயம் - 3 பத்தி - இரண்டு 

இந்த பத்தியில் முதல் வரியில் ஷங்கர் பேசும் வசனத்தை தொடர்ந்து மீரா பேசுவதை போல வரும். ஆனால் அச்சிட்டு இருக்கும் வரியை படித்தால் ரொம்ப குழப்பமாக இருக்கிறது. யார் என்ன பேசுகிறார்கள் என்று தெரியவில்லை மீண்டும் ஒரு முறை படித்த பிறகுதான் புரிந்தது. (") இந்த மாதிரியான குறியீடுகள் தான் வசனத்தை தனியாக எடுத்து காட்டும். புத்தகத்தில் நிறைய இடத்தில் (") இந்தகுறியீடு மிஸ்ஸிங். அதனால் சில இடத்தில் இந்த குழப்பத்தை ஏற்று கொள்ளவேண்டிய சந்தர்ப்பம் நமக்கு ஏற்ப்படுகிறது. 

"ழ" பதிப்பகத்தின் அடுத்த வெளியீடாக கே.ஆர்.பி. செந்தில் அவர்களின் பணம் வரபோகிறது என்று கடைசி பக்கத்தில் அறிவிப்பு செய்து இருக்கிறார், புத்தக ஆசிரியராகவும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.  பணம்  ஏற்கனவே இவரின் பதிவில் வலையேற்றம் செய்தது தான் என்பதால் வாங்கலாமா வேண்டாமா என்று நினைத்து கொண்டு இருக்கிறேன், முடிந்தவரை பதிவில் இல்லாததை புத்தகத்தில் கொண்டு வர முயற்சி செய்யவும். அதே போல ஒன்றுக்கு மூன்று முறை ப்ரூப் பாருங்கள்.


எந்த ஒரு தொடர்கதையோ அல்லது சிறுகதையோ முதலில் வாசிக்கும் போது தான் நன்றாக இருக்கும். அடுத்து என்ன அடுத்து என்ன என்கிற ஆவலை தூண்டும்.  மீள் வாசிப்பு செய்யும்  போது அதில் இருக்கும் நிறை குறைகள் தான் முக்கால் வாசி கண்களில் தென்படும்  அதை  போல இந்த புத்தகத்தை படிக்கும் போது எங்கே நிறை எங்கே குறை என்று மனதில் வந்து அழிச்சாட்டியம் செய்து கொண்டு இருந்தது. இதை தவிர்க்க நினைத்தாலும்  முடியவில்லை. புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.  



-- 
With Love
Romeo ;)