Thursday, June 16, 2011

சங்கதிகள் - ஜூன் 16 2011

புத்தகம் 
    
இந்த மாதிரி வெறித்தனமாக புத்தகம் படித்து எவ்வளவு நாள் ஆச்சு. கோபல்ல கிராமம் முடித்த கையேடு கோபல்லபுரத்து மக்கள் அடுத்து அந்தமான் நாயக்கர்  அடுத்து சொக்கன் எழுதிய அந்தமான் சிறை அல்லது இருட்டு உலகம் தொடர்ந்து நான்கு புத்தகங்களை படித்து முடித்தேன்.

முதல் முன்று புத்தகங்கள் உள்ள ஒற்றுமை நான்காவதில் இல்லை என்றாலும் அந்தமான் நாயக்கர் வாழ்ந்த இடம் எப்படி இருக்கும் என்கிற ஆவலை தூண்டிவிட்டார் கி.ரா. ஒரே சமயத்தில் ஒரு புத்தகம் படிப்பது எல்லாம் இல்லை, கொஞ்சம் இந்த புத்தகம் கொஞ்சம் அந்த புத்தகம் என்று மாத்தி மாத்தி படிக்கும் ஆசாமி நான் . அப்படி இருந்த என்னை ஒரே வாரத்தில் நான்கு புத்தகங்களை படிக்க தூண்டியது கி.ராவின் எழுத்து. ஆங்கிலேயன் வந்த போது, வந்த பிறகு, போன பிறகு என்று நாவல் சென்ற இடம் அட்டகாசம். கோபல்ல கிராமம் பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை எழுதிய வரை ஏதோ அவ்வளவாக திருப்தி அடையவில்லை. மீள் வாசிப்பு செய்து பதிவை மாற்றி எழுதவேண்டும். 

அமெரிக்க வியட்நாம் மீது தொடுத்த போர் பற்றி தமிழில் வெளிவந்து இருக்கும் புத்தகம் ஏதாவது உங்களுக்கு தெரிந்தால் கொஞ்சம் தெரியபடுத்தவும்.






அரசியல்

திருவொற்றியூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றிபெற்றது ஒரு செய்தி அளவில் தான் இருக்கு. தேர்தலில் தோல்வியுற்ற திமுக வேட்பாளரும் முன்னாள் மீன்வள துறை அமைச்சர் சாமி மற்றும் அவர் ஆதரவாளர்கள் பற்றி தான் இன்னும் டெரர் பேச்சு குறையவே இல்லை. 2001 அன்று நடைபெற்ற தேர்தலில் இவர் வெற்றிபெற்ற தொகுதிக்கு உட்பட்ட கேவிகே குப்பத்தை சார்ந்தவர்கள் இவருக்கு வாக்கு அளிக்கவில்லை என்பதால் அங்கே நடந்த அடிதடியில் ஆண்கள் பெண்கள் என்று ஏரியாவை காலிசெய்து கொண்டு ஓடியவர்கள் அதிகம் பேர். அப்பவே இது  பெரிய பிரச்சனை ஆகி அப்போதைய அமைச்சர் சாமி மற்றும் பலர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு கேஸ் கோர்ட்டு வரை சென்றது. அந்த கேஸ் இன்னும் இழுவையில் இருக்கு. இப்போ நடந்த தேர்தலில் சாமி தோற்றதும் அவர் ஆதரவாளர்கள் அந்த குப்பத்து ஆட்களிடம் பிரச்சனை செய்து அது கைகலப்பு வரை போயிடுச்சு. நிலைமை விபரிதம் ஆனதை தொடர்ந்து அந்த ஏரியா முழுக்க இப்போது போலீஸ் பந்தோபஸ்து போட்டு இருக்காங்க. 

சரி இந்த கேவிகே குப்பம் எங்க இருக்குன்னு தெரியுமா?? சாமி வீட்டுக்கு பக்கத்துக்கு தெருவில் !!!! 


படம் 

X-Men FirstClass முந்தைய நான்கு X-Men படங்களை காட்டிலும் ரொம்ப புதுமையா அதே சமயம் டெக்னிகளாக செம மிரட்டு மிரட்டி இருக்காங்க. முதல் நான்கு படங்களில் வந்த Hugh Jackman இதில் ஒரே ஒரே சீன் மட்டும் வந்து போறார். படத்துல நடிச்சவங்க எல்லோரும் இந்த அஞ்சாவது சீரிஸ் படத்துக்கு புதுசா இருக்காங்க என்பதால் படம் ரொம்ப வித்தியாசமா இருக்கு. மியூசிக் படத்துக்கு மிக பெரிய பலம், டென்ஷனை எகிற வைக்கிறது. மிஸ் பண்ணாம பார்த்துடுங்க. 






ஆரண்ய காண்டம் இன்னைக்கு பார்க்கலாம்ன்னு எங்க ஏரியால இருக்கும் ஸ்ரீனிவாசா தியேட்டருக்கு போனேன். வெளிய கூட்டமே இல்ல. சரி தியேட்டர் பக்கத்துல இருந்த ஒரு பெட்டி கடை கிட்ட வண்டியை நிப்பாட்டி தியேட்டர் உள்ள பார்த்தா செம கடுப்பாச்சு. காமேஸ்வரி என்கிற அதிபயங்கர படம் போட்டு இருக்கான். நம்ம உதா அண்ணன் பேரு எதாவது ஓரத்தில் இருக்கான்னு பார்த்தேன் பச் ஜஸ்ட் மிஸ்.இது என்னடா அதுக்குள்ள படத்தை தூக்கிடானேன்னு யோசிச்சிட்டே வீட்டுக்கு வந்தேன். அப்போ தான் நினைவுக்கு வந்துச்சு வேங்கை. இந்த தியேட்டர் சன் டிவிகாரங்க குத்தகை எடுத்து இருக்காங்கன்னு நினைக்கிறேன்   இவங்களோட எல்லா படமும் இங்கேயும் ரிலீஸ் பண்ணுவாங்க. வேங்கைகாக இப்பவே தியேட்டரை காலி பண்ணி வச்சி இருக்காங்கன்னு நினைக்கிறேன் !!!!





சோகம்

கொஞ்ச நாட்கள் இடைவேளையில் இரண்டு பேரின் மரணத்தை பார்க்கவேண்டி வந்தது. ஒருவர் எனக்கு அத்தை முறை மற்றொருவர் என் நண்பன் மோகன்ராஜ். 


மோகன் எப்பயும் ஜாலியா இருப்பான் அவன் கூட இருந்தா சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கும் அந்த அளவுக்கு காமெடி பண்ணுவான். அதே சமயம் ஏதாவது சில சமயம் வம்புல  சிக்கவச்சிடுவான்.  எல்லோருக்கும் ஒரு பட்டபேரு வச்சி இருப்பான் எப்படியாவது சீமென் ஆகணும்ன்னு ரொம்ப ஆசைப்பட்டான். ரெண்டு வருஷம் முன்னாடி வரைக்கும் ஷேர் ஆட்டோ ஓட்டிட்டு இருந்தான் இப்போ கொஞ்ச நாளா ஒரு பிரைவேட் பாங்க்ல கலெக்ஷன் டிப்பார்ட்மெண்ட்ல வேலை செஞ்சிட்டு இருந்தான். போன சனிக்கிழமை கோவளம் பக்கத்துல ஒருத்தர்கிட்ட கலெக்ஷன் பண்ண போயிருக்கான். திரும்பி வீட்டுக்கு வரும் போது குடிச்சிட்டு வண்டி ஓட்டி ஒரு லாரியில் அடிபட்டு இறந்து போனான். வீட்டுக்கு மூத்த பிள்ளை அதனால தான் என்னவோ வீடு பத்தி எந்த ஒரு கவலையும் இல்லாம இருந்தான். ஒருவேளை அவனுக்கு கல்யாணம் ஆகியிருந்தா ???  



அத்தை நெஞ்சு வலிக்கிறது என்று மருத்துவமனை சென்றவர் ஒரு வாரத்தில் பரலோகம் போயிட்டார். சின்ன வயசுல இருந்தே புகையிலை போடும் பழக்கம் இருந்து இருக்கு அவங்களுக்கு உபயம் அவங்க அம்மா அப்பா. இதுல  கொடுமை அவங்க ரெண்டு பேரும் உயிரோட இருக்காங்க.இரண்டு பெண்களுக்காக ரொம்ப சிக்கனமாக செலவு செய்து அவர்களுக்குகாக பணத்தை  சேர்த்து வச்சிட்டு இருந்தாங்க. கருப்பு என்று சொல்லப்படும் அந்த பதினாறாவது நாளில் அத்தை பெண் ஒருத்தி இனி யாரை  மாமா நான் அம்மான்னு கூப்பிடுவேன்னு அழுதா என்ன சொல்லி அவள் மனச தேத்துறது தெரியாம நின்னுட்டு இருந்தேன்.

நாளைக்கே இதே நிலைமை எனக்கும் வரலாமே அப்போ நானும் இப்படிதான் இருப்பேனோ !!! 

ஒரு மரணத்துக்கு பிறகு பிறக்கும் ஆயிரம் கேள்விகளுக்கு பதில் உடனே கிடைப்பதில்லை !!!




--
With Love
அருண் மொழித்தேவன் ( Romeo) 

Tuesday, June 7, 2011

கோபல்ல கிராமம் - கி. ராஜநாராயணன்


உணவு தேடி வந்த வௌவால்கள் இருப்பிடம் திரும்ப, வேட்டையில் இருந்து பூனைகள் வீடு திரும்ப, இரவு விலங்குகள் பொந்துக்கு திரும்ப, சேவல் சிறகுகளை தட்டி விடியலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த இப்படி ஒரு கரிசல் கிராமம் எப்படி ஒரு நாளை துவங்குகிறது என்று வரிக்கு வரி என்னை போன்ற நகரத்து ஆசாமிகளுக்கு பெரிய ஆச்சரியத்தை உண்டாகி நாவல் உள்ளே அழைத்து செல்கிறார் கி.ரா.

சுமார் இருநூறு முண்ணுறு ஆண்டுகளுக்கு முன்னாள் ஒரு கிராமம் எப்படி இருந்தது?? உணவுக்கு என்ன செய்து கொண்டு இருந்தார்கள். மக்களின் பழக்க வழக்கங்கள் என்ன என்ன ? உடுத்திய உடை என்ன? எப்படி அவர்கள் அங்கே வந்தார்கள்? இப்படி எங்கோ ஒரு கரிசல் பூமியில் வாழ்ந்த மக்களின் கதை தான் கோபல்ல கிராமம்.

கி.ராவின் படைப்புகளில் நான் முதல் முதலில் படித்த நாவல். நண்பர்கள் ஏற்கனவே சொல்லி இருந்தார்கள், புத்தகத்தை நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இருக்காது. முற்றிலும் வேறு ஒரு தளம், வேறு ஒரு மொழி, வேறு ஒரு கதை என்று அத்தனையும் உண்மை. நாவலின் தலைப்பை வைத்து இந்த புத்தகத்தை எடை போட முடியவில்லை.  கனமான பாத்திரம் என்று ஏதும் இந்த நாவலில் இல்லை ஒரு கிராமத்தில் இருக்கும் மக்களை பற்றிய கதை தான் இது. அவ்வளவே ஆனாலும் மனசு முழுக்க அந்த மக்கள் தான் இருகிறார்கள்.  





நூற்றாண்டை கடந்த ஒரு கிழவி அந்த கிராமத்து மக்களின் முன்னோர்கள் எப்படி இங்கே வந்தார்கள் என்று விவரிக்கிறார். பேரிளம் குமாரியை அடைய நினைக்கும் துலுக்க ராஜாவிடம் இருந்து அவளும் அவள் சார்ந்த பெரிய குடும்பமும் உயிரை கையில் பிடித்து கொண்டு தெலுங்கு தேசத்தில் இருந்து தப்பிகிறார்கள். எத்தனை நாட்கள் இவ்வாறு கடந்தது என்று தெரியாமல் கால்கள் வலிக்க, சில உயிர்கள் மறிக்க தங்களுக்கு என்று ஒரு புதிய பூமியை அவர்களே உருவாகிறாகள்.வந்தேறிகள் என்பதற்கு முக்கிய எடுத்துக்காட்டாக இருகிறார்கள் இந்த கிராமத்து மக்கள். வந்தவர்கள் ஒரு காட்டை அழித்து தங்களுகென்று ஒரு கிராமத்தை உருவாகிறார்கள். அதை எப்படி உருவாகினார்கள், அந்த மக்களின் மனம் எப்படி இருந்தது அவர்களின் குணாதசியங்கள் எப்படி என்று நாவல் உள்ளே செல்ல செல்ல பிரமிப்பு கூடி கொண்டே செல்கிறது. 


ஒரு கிராமத்தின் கதை என்றாலும் கோட்டையார் குடும்பம் தான் பிரதானமாக இடம்பெற்று இருக்கிறது. அவர்களை தவிர்த்து அந்த கிராமத்தில் இருக்கும் மக்களை அவ்வளவாக விவரிக்கவில்லை என்றாலும் அக்கையா என்கிற கதாபாத்திரம் தனியாக தெரிகிறது . அவரும் கோட்டையார் வீட்டின் சொந்தம் என்றாலும் நாவலில் அவருக்கு என்று தனியாக ஒரு இடம் இருப்பதை மறுக்க முடியாது. முழுக்க முழுக்க நையாண்டி நகைச்சுவை பேச்சு என்று கிராமத்து மக்களை கிண்டல் அடித்து கொண்டே எல்லோரின் அன்பையும் பெறுகிறார், நம்மையும் சேர்த்தே. கிராமத்தில் எல்லோரும் ஒற்றுமையாக இருகிறார்கள், நாயக்கர் என்கிற சமுதாயம் மட்டுமே அங்கு வாழ்ந்து கொண்டு இருந்ததால் அவர்களிடம் எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் நாட்கள் நகருகிறது.  பெரியதாக எந்த ஒரு பிரச்சனை பற்றி அலசாமல் நாவல் ரொம்ப சுவாரஸ்யமாக எதிர்பார்ப்பு ஏதும் இல்லாமல் அமைதியாக செல்கிறது. நாவலின் பிற்பகுதியில் பஞ்சாயத்து கூடும் இடத்தில  கிராமத்தில் இருக்கும் சில முக்கியஸ்தர்களை அறிமுகபடுத்தும் இடம் அருமையா இருக்கும். கிட்டத்தட்ட முன்று நான்கு அத்தியாங்களுக்கு  மேல் அவர்களை அறிமுகப்படுத்தும் இடம் இதுவரை நான் படிக்காத ஒன்று. ஒவ்வொருவருக்கும் ஒரு பட்ட பெயர் அது எதனால் வந்தது என்று விவரித்து கொண்டு சென்ற இடம் நாவலின் உச்சம்.



நாவலில் குறைகள் என்று சிலது உள்ளது, அதும் என்னளவில் மட்டுமே. ஒன்று இவர்கள் தப்பி வரும் போது ஒரு மரம் அனைவரையும் ஆற்றுக்கு அக்கரையை கடக்க உதவுவது. கோவிலில் சாமி வந்து உதவுவது, கழுவில் எற்றபட்டவன் இரண்டொரு நாள் உயிருடன் இருப்பது என்று சிலவற்றை படிக்கும் போது ஏதோ விட்டலாச்சாரிய கதையில் வரும் பகுதி போல இருந்தது. அதை தவிர்த்து நாவலில் உள்ளே உபயோக படுத்தி இருக்கும் வார்த்தைகள். பல வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமல் படித்தேன். சிலது மட்டுமே என்னால் இது தான் என்று யூகிக்க முடிந்தது.  பல வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று தெரியாமல் நாவலின் சுவாரஸ்யத்தில் அதை கண்டுகொள்ளாமலே கடந்து போனேன். மீள் வாசிப்பு செய்யும் போது தான் அதன் அர்த்தங்களை தேடி கண்டுபிடிக்கவேண்டும். 


கி.ராவின் உழைப்பு பார்த்தால் ரொம்ப பிரமிப்பாக இருக்கிறது, எத்தனையோ நூற்றாண்டுக்கு முன்னாள் இருந்த பழக்க வழக்கங்கள், அப்போது புழக்கத்தில் இருந்த சொற்கள், மக்கள் உண்ட உணவுகள், உடுத்திய உடைகள், விவசாயத்துக்கு உதவிய கருவிகள் என்று படிக்க படிக்க ரொம்ப வியக்க வைக்கிறார்.  கரிசல் பூமியை பார்த்திடாத என்னை போன்ற ஆட்களுக்கு இது இது இப்படி இருக்கும் என்று விரிவாக நாவலில் விவரித்து இருக்கிறார். கி.ராவின் எழுத்து நடையை என்னவென்று சொல்ல கரிசல் இலக்கியம் அட்டகாசம். இந்நாவல் கால ஓட்டத்தின் முன் பின் என்று அசைந்து அசைத்து செல்கிறது. ஒரு கதைக்குள் இன்னொரு கதை வந்து உட்கார்ந்து கொள்கிறது. நிழல்காலத்தில் நடக்கும் ஒரு கதையின் ஊடே இன்னொரு கதை உள்ளே வரும் பிறகு அது காணாமல் போய்விடும் பிறகு வேறு ஒரு கதை ... இப்படி சுவாரசியத்துக்கு பஞ்சமே இல்லாமல் கதை முடிகிறது.




--
With Love
அருண் மொழித்தேவன் (aka) Romeo ;)







Wednesday, June 1, 2011

ஒரு வேண்டுதலின் பயணத்தில் - 2

இரவு அடித்து போட்டது போல தூங்கினேன், ஜூனியர் எனக்கு முன்பே தூங்கிவிட்டான். அதிகாலை 4 மணி அளவில் மகா எழுப்பிவிட்டாள், பல்லு மட்டும் தேச்சிட்டு வாங்க ஆத்துல(?) போயி குளிச்சிகளாம் என்று சொல்லிவிட்டு நடையை கட்டினாள். எனக்கு அந்த அதிகாலையில் ஒரு சந்தேகம்  வந்தது, நேத்து தான் அங்க போனோம் ஆறு என்கிற பெயருக்கு ஏற்றது போல எதுவுமே அங்க இல்லையே எதில் போயி குளிப்பது ??? ஒருவேளை அந்த அழுக்கு தண்ணிலயா!!! நினைச்சாலே உடம்பு கிர் என்று ஷாக் அடித்தது. வேறு வழியில்லை தோளில் கரும்பு கட்டை தூக்கி கொண்டு நடந்தேன். எனக்கு எதிரே  நிறைய மக்கள் கையில் தீ சட்டியை ஏந்திக்கொண்டு வந்தார்கள். சிலர் கரும்பு தொட்டில், சிலர் அழகு குத்தி கொண்டு இப்படி நேர்த்தி கடனை செலுத்துவதற்காக அதிகாலைலே ஆவலாய் பறந்தார்கள்.  

ஆத்துக்கு அருகில் சென்ற போது தான் தெரிந்தது எப்படி குளிப்பது என்று. ஒரு நீளமான பைப்பில் குடை போல சில குழாய்களை வெளியே இழுத்து அதில்   ஷவர் போல செய்துள்ளார்கள். தண்ணீர் நிற்காமல் கொட்டி கொண்டு இருந்தது. இதை போல இரண்டு சாதனங்கள்  இருந்தது. அதில் சென்று குளித்துவிட்டு கரும்பு தொட்டில் தூக்கி கொண்டு சென்றோம். ஜூனியர் கையில் ஒரு சாக்லேட் குடுத்து தொட்டில் சீலையில் இரண்டு பக்கமும் கால்களை வெளியே விட்டு கொண்டு ஜாலியாக வேடிக்கை பார்த்து கொண்டு வந்தான். இவன் கண்டிப்பா கத்தி மானத்தை வாங்குவான் என்று தான் நினைத்தேன். நல்லவேளை தலைவர் ரொம்ப அமைதியாக வந்து வேண்டுதலை நிறைவேற்ற உதவினார். கரும்பு தொட்டில் கோவிலை வந்தடைந்த போது ஒரு அன்பர் வந்து ஒரு கை குடுத்தார். ஜூனியரை எடுக்க சொல்லிட்டு ஐம்பத்தி ஒருருபாய் தச்சனை என்று வாங்கி கொண்டார். கரும்பை அங்கேயே போட சொல்லி விட்டு நீங்க நடையை காட்டுங்கள் என்றார். கீழே இருந்த கரும்பை ஒருவர் அள்ளிட்டு சென்று ஒரு இடத்தில வைத்தார். நூற்றுக்கும் மேற்ப்பட்ட கரும்புகள் குவித்து வைத்து இருதார்கள். நல்ல சைடு பிசினஸ் .. 

  (ஒரு வாண்டு தொட்டிலில்)


ஒரு பக்தர் ஆத்தில் இருந்தே அங்கபிரத்சணம் செய்து கொண்டு வந்தார் ரோடு மொத்தமும் அவ்வளவு சேரும் சகதியுமா இருந்து மனுஷன் கண்டிப்பா அடுத்த முறை இந்த மாதிரி வேண்டிக்கொள்ள மாட்டார் கோவில் போய் சேர்வதற்குள்  அவ்வளவு வேதனையை கண்டிப்பா சம்பாதித்து இருப்பார். 

நிறைய பேர் சாமி ஆடிக்கொண்டு இருந்தார்கள். மாரியம்மன் ஒரு சாமி தானே இங்க இருக்கு எப்படி இத்தனை பேர்  மேல ஒரே சாமி ஏறும்?? மகா கிட்ட கேட்டேன் அவளுக்கும் பதில் தெரியவில்லை ..



ஒரு பக்தர் வலது காலை சற்றே விந்தி விந்தி நடந்தார் அவரும் தொட்டில் சீலை எடுத்து தனது வேண்டுதலை நிறைவேற்றினார். அவர் சென்ற போது ரோடு ஓரத்தில் இருந்த எல்லோரும் அவரையே பார்த்து கொண்டு இருதார்கள்.

(அந்த பக்தர்)




பலர் அழகு குத்தி கொண்டும் கையில் தீசட்டி எந்திகொண்டும் வந்தார்கள். வயது வித்தியாசம் எல்லாம் இல்லை.  ரோட்டு ஓரத்தில் சிலர் கையில் எண்ணெய் வைத்து கொண்டு தீசட்டி கொண்டு வருபவர்களின் சட்டியில் எண்ணையை உற்றி கொண்டு இருந்தார்கள். இது ஒருவகை நேர்த்தி கடன்!!!.. இதனால் சில சட்டியில் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்தது. 
 
அழகு குத்தி கொண்டு வந்தவர்களில் நிறைய பேரின் வேல் பத்து அடிக்கு குறையாமல் இருந்தது. பார்க்கும் போதே யாரோ எனக்கு அழகு குத்துவது போல இருந்தது.  சிலர் சாமி வந்தது போல ஆடிக்கொண்டே இருந்தார்கள்.

  (இது கண்டிப்பாக பதினைந்து அடிக்கு மேல் இருக்கும்)


இதற்கு எல்லாம் தான் தான் அப்பன் என்று முவர் கூட்டணி வந்தது. ஊரே அவர்களைத்தான் பார்த்து கொண்டு இருந்தது. அதை எப்படி விலகுவது என்று தெரியவில்லை புகைப்படத்தை பாருங்கள் 


 (டெர்ரர் கூட்டணி)


எல்லா வீதிகளிலும் அன்னதானம் நடைபெற்று கொண்டு இருந்தது, எங்கிருந்தோ ஒரு சின்ன யானை வண்டி வந்து நிற்கும் உள்ளே இருந்து ஏதாவது வெரைட்டி சாதத்தை போட்டு கொண்டே இருப்பார்கள். மக்களும் வாங்கி கொண்டேடேடே இருப்பார்கள். சிலர் மண்டபங்களில் அன்னதானம் செய்து கொண்டு இருந்தார்கள். எனது மாமானார் வீட்டு  தெரு முக்கில் குவிந்து இருந்த குப்பைகளை அள்ள அடுத்த நாள் இரண்டு லாரி வந்தது.

 
(என்ன ஒரு மேக் அப்)




லோக்கல் டிவியில் முன்று நாட்களும் இந்த திருவிழாவை தான் ரீலை செய்து கொண்டு இருந்தார்கள். மிக பெரிய காமெடி என்னவென்றால் ஒரே நேரலையை நான்கு லோக்கல் சேனல்கள் பகிர்ந்து கொண்டு ஒரே நேரத்தில் ஒளிப்பரப்பு செய்தது தான். ஒரு லோக்கல் சேனலில் திருவிழாவிற்கு வந்தவர்களிடம் லைவ்வாக பேட்டி கண்டு அவர்களுக்கு பிடித்த பாடலை ஒளிபரப்பு செய்தார்கள்.  இங்கேயுமா ????


 (நேரடிஒளிபரப்பில்)

 


கேமராவில் கிளிக்கியது  ;)







--
With Love
அருண் மொழித்தேவன் @ Romeo ;)