Tuesday, June 7, 2011

கோபல்ல கிராமம் - கி. ராஜநாராயணன்


உணவு தேடி வந்த வௌவால்கள் இருப்பிடம் திரும்ப, வேட்டையில் இருந்து பூனைகள் வீடு திரும்ப, இரவு விலங்குகள் பொந்துக்கு திரும்ப, சேவல் சிறகுகளை தட்டி விடியலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த இப்படி ஒரு கரிசல் கிராமம் எப்படி ஒரு நாளை துவங்குகிறது என்று வரிக்கு வரி என்னை போன்ற நகரத்து ஆசாமிகளுக்கு பெரிய ஆச்சரியத்தை உண்டாகி நாவல் உள்ளே அழைத்து செல்கிறார் கி.ரா.

சுமார் இருநூறு முண்ணுறு ஆண்டுகளுக்கு முன்னாள் ஒரு கிராமம் எப்படி இருந்தது?? உணவுக்கு என்ன செய்து கொண்டு இருந்தார்கள். மக்களின் பழக்க வழக்கங்கள் என்ன என்ன ? உடுத்திய உடை என்ன? எப்படி அவர்கள் அங்கே வந்தார்கள்? இப்படி எங்கோ ஒரு கரிசல் பூமியில் வாழ்ந்த மக்களின் கதை தான் கோபல்ல கிராமம்.

கி.ராவின் படைப்புகளில் நான் முதல் முதலில் படித்த நாவல். நண்பர்கள் ஏற்கனவே சொல்லி இருந்தார்கள், புத்தகத்தை நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இருக்காது. முற்றிலும் வேறு ஒரு தளம், வேறு ஒரு மொழி, வேறு ஒரு கதை என்று அத்தனையும் உண்மை. நாவலின் தலைப்பை வைத்து இந்த புத்தகத்தை எடை போட முடியவில்லை.  கனமான பாத்திரம் என்று ஏதும் இந்த நாவலில் இல்லை ஒரு கிராமத்தில் இருக்கும் மக்களை பற்றிய கதை தான் இது. அவ்வளவே ஆனாலும் மனசு முழுக்க அந்த மக்கள் தான் இருகிறார்கள்.  





நூற்றாண்டை கடந்த ஒரு கிழவி அந்த கிராமத்து மக்களின் முன்னோர்கள் எப்படி இங்கே வந்தார்கள் என்று விவரிக்கிறார். பேரிளம் குமாரியை அடைய நினைக்கும் துலுக்க ராஜாவிடம் இருந்து அவளும் அவள் சார்ந்த பெரிய குடும்பமும் உயிரை கையில் பிடித்து கொண்டு தெலுங்கு தேசத்தில் இருந்து தப்பிகிறார்கள். எத்தனை நாட்கள் இவ்வாறு கடந்தது என்று தெரியாமல் கால்கள் வலிக்க, சில உயிர்கள் மறிக்க தங்களுக்கு என்று ஒரு புதிய பூமியை அவர்களே உருவாகிறாகள்.வந்தேறிகள் என்பதற்கு முக்கிய எடுத்துக்காட்டாக இருகிறார்கள் இந்த கிராமத்து மக்கள். வந்தவர்கள் ஒரு காட்டை அழித்து தங்களுகென்று ஒரு கிராமத்தை உருவாகிறார்கள். அதை எப்படி உருவாகினார்கள், அந்த மக்களின் மனம் எப்படி இருந்தது அவர்களின் குணாதசியங்கள் எப்படி என்று நாவல் உள்ளே செல்ல செல்ல பிரமிப்பு கூடி கொண்டே செல்கிறது. 


ஒரு கிராமத்தின் கதை என்றாலும் கோட்டையார் குடும்பம் தான் பிரதானமாக இடம்பெற்று இருக்கிறது. அவர்களை தவிர்த்து அந்த கிராமத்தில் இருக்கும் மக்களை அவ்வளவாக விவரிக்கவில்லை என்றாலும் அக்கையா என்கிற கதாபாத்திரம் தனியாக தெரிகிறது . அவரும் கோட்டையார் வீட்டின் சொந்தம் என்றாலும் நாவலில் அவருக்கு என்று தனியாக ஒரு இடம் இருப்பதை மறுக்க முடியாது. முழுக்க முழுக்க நையாண்டி நகைச்சுவை பேச்சு என்று கிராமத்து மக்களை கிண்டல் அடித்து கொண்டே எல்லோரின் அன்பையும் பெறுகிறார், நம்மையும் சேர்த்தே. கிராமத்தில் எல்லோரும் ஒற்றுமையாக இருகிறார்கள், நாயக்கர் என்கிற சமுதாயம் மட்டுமே அங்கு வாழ்ந்து கொண்டு இருந்ததால் அவர்களிடம் எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் நாட்கள் நகருகிறது.  பெரியதாக எந்த ஒரு பிரச்சனை பற்றி அலசாமல் நாவல் ரொம்ப சுவாரஸ்யமாக எதிர்பார்ப்பு ஏதும் இல்லாமல் அமைதியாக செல்கிறது. நாவலின் பிற்பகுதியில் பஞ்சாயத்து கூடும் இடத்தில  கிராமத்தில் இருக்கும் சில முக்கியஸ்தர்களை அறிமுகபடுத்தும் இடம் அருமையா இருக்கும். கிட்டத்தட்ட முன்று நான்கு அத்தியாங்களுக்கு  மேல் அவர்களை அறிமுகப்படுத்தும் இடம் இதுவரை நான் படிக்காத ஒன்று. ஒவ்வொருவருக்கும் ஒரு பட்ட பெயர் அது எதனால் வந்தது என்று விவரித்து கொண்டு சென்ற இடம் நாவலின் உச்சம்.



நாவலில் குறைகள் என்று சிலது உள்ளது, அதும் என்னளவில் மட்டுமே. ஒன்று இவர்கள் தப்பி வரும் போது ஒரு மரம் அனைவரையும் ஆற்றுக்கு அக்கரையை கடக்க உதவுவது. கோவிலில் சாமி வந்து உதவுவது, கழுவில் எற்றபட்டவன் இரண்டொரு நாள் உயிருடன் இருப்பது என்று சிலவற்றை படிக்கும் போது ஏதோ விட்டலாச்சாரிய கதையில் வரும் பகுதி போல இருந்தது. அதை தவிர்த்து நாவலில் உள்ளே உபயோக படுத்தி இருக்கும் வார்த்தைகள். பல வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமல் படித்தேன். சிலது மட்டுமே என்னால் இது தான் என்று யூகிக்க முடிந்தது.  பல வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று தெரியாமல் நாவலின் சுவாரஸ்யத்தில் அதை கண்டுகொள்ளாமலே கடந்து போனேன். மீள் வாசிப்பு செய்யும் போது தான் அதன் அர்த்தங்களை தேடி கண்டுபிடிக்கவேண்டும். 


கி.ராவின் உழைப்பு பார்த்தால் ரொம்ப பிரமிப்பாக இருக்கிறது, எத்தனையோ நூற்றாண்டுக்கு முன்னாள் இருந்த பழக்க வழக்கங்கள், அப்போது புழக்கத்தில் இருந்த சொற்கள், மக்கள் உண்ட உணவுகள், உடுத்திய உடைகள், விவசாயத்துக்கு உதவிய கருவிகள் என்று படிக்க படிக்க ரொம்ப வியக்க வைக்கிறார்.  கரிசல் பூமியை பார்த்திடாத என்னை போன்ற ஆட்களுக்கு இது இது இப்படி இருக்கும் என்று விரிவாக நாவலில் விவரித்து இருக்கிறார். கி.ராவின் எழுத்து நடையை என்னவென்று சொல்ல கரிசல் இலக்கியம் அட்டகாசம். இந்நாவல் கால ஓட்டத்தின் முன் பின் என்று அசைந்து அசைத்து செல்கிறது. ஒரு கதைக்குள் இன்னொரு கதை வந்து உட்கார்ந்து கொள்கிறது. நிழல்காலத்தில் நடக்கும் ஒரு கதையின் ஊடே இன்னொரு கதை உள்ளே வரும் பிறகு அது காணாமல் போய்விடும் பிறகு வேறு ஒரு கதை ... இப்படி சுவாரசியத்துக்கு பஞ்சமே இல்லாமல் கதை முடிகிறது.




--
With Love
அருண் மொழித்தேவன் (aka) Romeo ;)







2 comments:

  1. நல்லா ரசிச்சு படிச்சிருக்கீங்க தம்பி.நல்லா வருவீங்க. அப்பிடியே ஓரமா ஒக்காந்து ‘9 ரூ நோட்டு’ படிச்சி எழுதுனீங்கன்னா ரொம்ப சந்தோஷப்படுவோம்.நன்றி.

    ReplyDelete
  2. எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.முழு விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

    ReplyDelete